நிலக்கோட்டை கோட்டூரில் ஜல்லி குவித்ததோடு நிற்கும் சாலை பணி

வத்தலக்குண்டு: நிலக்கோட்டை அருகே கோட்டூர் செல்வாநகரில் சாலை பணி ஜல்லி கற்கள் கொட்டியதோடு நிற்கிறது. இதனால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கோட்டூர் ஊராட்சிக்குட்பட்டது செல்வா நகர். இங்கு சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவ்வூரின் மயானத்திற்கு கடந்த 40 ஆண்டுகளாக மண் சாலை மட்டுமே இருந்தது. இதனால் மழைக்காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக மாறி விடுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்ததன்பேரில் மயானத்திற்கு தார்ச்சாலை அமைக்க ஊராட்சி ஒன்றியம் நிதி ஒதுக்கி ஜல்லி கற்களை சாலையில் குவித்தது. இதற்கிடையே சிலர் சாலை போடவிடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் சாலை பணிகள் அப்படியே கிடப்பில் கிடக்கின்றன. இதன் காரணமாக ஊருக்குள் தண்ணீர் லாரி, ஆம்புலன்ஸ் வர முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மேலும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். எனவே இனியும் தாமதமின்றி உடனே தார்ச்சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: