வாஷிங்டன்: முதலீடுகள் பெருக வழிவகுக்கும் என்பதால், கார்ப்பரேட் வரிவிகிதத்தைக் குறைத்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு ஐஎம்எஃப் ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில் நாட்டில் பொருளாதார மந்த நிலையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. குறிப்பாக வாகன தொழில் முடங்கியுள்ளது. கார் தொழிற்சாலைகள் விடுமுறை விட்டுள்ளன. இதனால் வாகன விற்பனை 35 சதவீதத்துக்கு மேல் குறைந்து விட்டது. இதேபோல, ரியல் எஸ்டேட் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பால் பண பரிவர்த்தனையில் நெருக்கடி ஏற்பட்டது. சிறு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல சலுகைகளை அறிவித்து வருகிறார்.
இதன்படி,‘‘வருமான வரிச் சட்டத்தில் 2019-20ம் நிதியாண்டு முதலே புதிய வரி விகிதம் சேர்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்கள் 15 சதவீதம் வருமான வரி செலுத்தினால் போதும். உள்நாட்டு நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் கார்ப்பரேட் வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார். உள்நாட்டு நிறுவனங்களுக்கு 22 சதவீதம் மட்டும் வருமான வரி நிர்ணயம் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேட் வரி 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படும் என்றார். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்கும் போது கிடைக்கும் லாபம் மீதான வரி மீது சர்ஜார்ஜ் ரத்து செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனால் அரசுக்கு ரூ.1.45 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய, ஐஎம்எஃப் ஆசிய-பசிஃபிக் துறையின் இயக்குநர் சாங்யாங் ரீ, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 7 சதவீதமாகவும் இருக்கும் என குறிப்பிட்டார். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகளும், கார்ப்பரேட் வரி விகிதம் குறைக்கப்பட்டதும், முதலீடுகள் பெருக உதவும் என்றும் கூறினார். அரசுத்துறை வங்கிகள் சீரமைப்பு போன்ற நடவடிக்கைகள் மேம்பாட்டுக்கு உதவும் என்றும், அதேசமயம், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பிரச்சனைக்கு இன்னும் முழுமையாக தீர்வு காணப்படாமல் உள்ளது என்றும் சாங்யாங் ரீ சுட்டிக்காட்டினார்.