அம்மாபேட்டை அருகே கல் குவாரியில் வெடிவிபத்தில் 2 பேர் உடல் சிதறி பலி : மின்னல் தாக்கியதால் விபரீதம்

பவானி: அம்மாபேட்டை அருகே கல் குவாரியில் பாறைகளை உடைக்க வெடி வைத்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் இரு தொழிலாளிகள் உடல் சிதறி பலியாகினர்.  அம்மாபேட்டை அருகே உள்ள அந்தோணிபுரம் பகுதியில் கல் குவாரி இயங்கி வருகிறது. இக்குவாரியில், நேற்று மாலை தொழிலாளர்கள் செந்தில் (40), சுப்பிரமணியம் (35), ஆறுமுகம் (38) ஆகியோர் பாறைகளைப் பிளக்க வெடி வைத்தனர். சுமார் 200 அடி உயரத்தில் பாறைகளை பிளக்க வெடி மருந்துகளை வைத்துவிட்டு, பாறைகளை வெடிக்க வைக்க தேவையான கம்பிகளை இணைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, இடி, மின்னலுடன் மழை பெய்ய துவங்கியதால் திடீரென பாறைகளுக்கு வைத்த வெடி வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் பாறைகளுடன் தூக்கி வீசப்பட்ட பெருமாள், ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மற்றொரு தொழிலாளி சுப்பிரமணியம் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இத்தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அம்மாபேட்டை போலீசார், இருவரின் உடலையும் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வெடி வைத்தபோது மின்னல் தாக்கியதால் வெடி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: