கலைஞர் அறக்கட்டளை சார்பில் மருத்துவம், கல்விக்காக எட்டு பேருக்கு2 லட்சம்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை:  கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவம், கல்விக்காக தலா 25 ஆயிரம் வீதம் 2 லட்சம் நிதியை மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக கலைஞர் தந்த 5 கோடியில் கிடைக்கும் வட்டியில் மாதந்தோறும் நலிந்தோர்க்கு உதவி தொகை 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது. 5 கோடியில் 1 கோடியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு 2007ல் வழங்கினார்.மீதமுள்ள 4 கோடியில் கிடைக்கும் வட்டியில் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதுவரை 4 கோடியே 89 லட்சத்து 90 ஆயிரம் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் வட்டியில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா 25 ஆயிரம் வீதம் ₹2 லட்சத்தை மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து போகும் செலவை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்படுகிறது.

 அதன்படி, சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியை சேர்ந்த எஸ்.மணி, காஞ்சிபுரம் வளத்தீஸ்வரர் கோவில் தோட்ட தெரு முருகேஸ்வரி, திருச்சி மாவட்டம் பொன்னலம்பட்டி ஆறுமுகம், திருப்பூர் மாவட்டம் கணக்கன்காடு மொட்டையப்ப கவுண்டர், திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் மு.கருணாநிதி, ராமநாதபுரம் மாவட்டம் மேலப்புதுக்குடி கிராமம் முகைதீன் அப்துல்காதர், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரன்புதூர் அருணாச்சலம், ஆந்திர மாநிலம் பீர்மேடு தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த முத்து ஆகியோர் பெறுகின்றனர். இந்த தகவலை திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories: