புதுடெல்லி: ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்து கைதான 127 பேரும் சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் உசேன் பேச்சால் கவரப்பட்டவர்கள் என்று தேசிய பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. டெல்லியில் தீவிரவாத எதிர்ப்பு படை மற்றும் சிறப்பு அதிரடி படை அமைப்புகளின் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. என்.ஐ.ஏ ஏற்பாடு செய்துள்ள 2 நாட்கள் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், ஒவ்வொரு அமைப்பும் கண்காணிப்புடன் செயல்பட்டு தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தீவிரவாத வழக்குகளை இதர வழக்குகளுடன் ஒப்பிட்டு விசாரணை நடத்தக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தற்போது நடைபெற்று வரும் நிதி நடவடிக்கை பணிக்குழு கூட்டம் (FAFT) காரணமாக பாகிஸ்தான் மிகுந்த அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.