காஞ்சிபுரம்: சீன அதிபர் ஸி ஜின்பின்னுக்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் இடையேயான சந்திப்பால் மாமல்லபுரம் பக்கம் உலகத்தின் பார்வை திரும்பியுள்ளது. இச்சமயத்தில் தமிழ்நாட்டிற்கும், சீனாவுக்குமான உள்ள உறவு குறித்து அறியப்படும். சீனர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே கி.மு.2 ஆம் நூற்றாண்டில் இருந்தே நல்லுறவு நிலவியதற்கான சான்றுகள் மாமல்லபுரத்தில் விரவிக்கிடக்கின்றன. பல்லவர்கள் காலத்தில் இருந்தே சீனர்கள் உடனான வணிகத் தொடர்புகள் செழிப்பாக இருந்தன. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே இருதரப்பு வணிகத்திற்கு மாமல்லபுரம் துறைமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கிறது. சுனாமிக்கு பிறகு மகாபலிபுரம் அருகே சாளுவன்குப்பம் என்கின்ற பகுதியில் துறைமுகத்திற்கு உண்டான கட்டுமானங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனையடுத்து ஏற்றுமதி இறக்குமதி மூலம் வாசனைப் பொருட்களை தந்ததும் பட்டு நெசவை சீனர்களிடம் கற்றதும் இன்றளவும் இருதரப்புக்கான நல்லுறவின் உதாரணங்களாக இருக்கின்றன. பல்லவர் காலத்தில் சிறந்து விளங்கிய இயற்கை மருத்துவ முறைகள், சிகிச்சை முறைகளையும், தமிழகத்தில் இருந்து சீனா பெற்றுள்ளது.