தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கில், சிபிசிஐடி தரப்பில் உரிய ஆவணங்களை வரும் 14ம் தேதி ஒப்படைக்க வேண்டுமென தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா பிடிபட்டார். இந்த விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார், மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனை கைது செய்தனர். இதேபோல, சென்னையை சேர்ந்த மாணவர்கள் பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிட் ஆகியோரையும் கைது செய்தனர். இவர்கள் 4 பேரையும் ஜாமீனில் விடக்கோரி தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை நேற்று மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்தது.