சீன அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜம்மு, லடாக் மாணவர்கள் கைது

சென்னை : கிழக்கு கடற்கரை சாலையில் தாஜ் ஓட்டல் குன்றுக்காடு பகுதியில் நடந்த வாகன சோதனையில், சீன அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற ஜம்மு, லடாக்கை சேர்ந்த பெங்களூரு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் நேற்று மாலையில் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கிழக்கு கடற்கரை சாலையில் தாஜ் ஓட்டல் அமைந்துள்ள குன்றுக்காடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, 5 பேர் ஒரு காரில் வந்தனர். சந்தேகத்திற்கிடமான அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ஜம்மு, லடாக் பகுதியை சேர்ந்த பெங்களூரு யுனிவர்சிட்டியில் பிஏ இரண்டாம் ஆண்டு அரசியல் அறிவியல் படிக்கும் கர்மா ட்டெ (20), சரிங் ராம்ஜியால், சலாம் ராவ் சோர், டென்ஜின் செராப், அரியானா மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் யாதவ், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் ஜம்புலிங்கம் (29) ஆகிய 5 பேரும் சீன அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கத்தில் வந்ததாக தெரிய வந்தது.

இவர்களை அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலமோசடி பிரிவு கண்காணிப்பாளர் கண்ணம்மா தலைமையிலான போலீசார் கைது செய்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் திபெத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என தெரியவந்தது. மேலும், இதுபோன்று வேறு யாரேனும் வந்துள்ளனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.

Related Stories: