சங்க காலம் முதல் தொடரும் சீனா - தமிழ்நாடு உறவு; சீனத்துப்பட்டு பற்றி விவரிக்கும் பட்டினப்பாலை

காஞ்சிபுரத்தில் இருந்து சென்ற போதிதர்மர் சீனாவில் புத்த மதத்தை பரப்பிய பிறகே தமிழ்நாடு - சீனாவுக்கும் இடையே உறவு தொடங்கியதாக பலரும் கருதுகின்றனர். ஆனால் சங்ககாலம் முதலே இரு நாடுகளுக்கும் இடையே வணிகத்தொடர்பு இருந்திருக்கிறது. குனக்கடல் துகீர் என்று சீனத்துப்பட்டு பற்றி பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. மலேசியா, தமிழ்நாடு வழியாக சீனர்கள் யவன நாட்டிற்கு கடல் வணிகம் செய்துள்ளனர். இந்த வணிக தொடர்பு தான் கி.பி. 640 ஆண்டுவாக்கில் நரசிம்மவர்மன் காலத்தில் சீன நாட்டு பயனியான யுவான் சுவாங்கை காஞ்சிபரத்திற்கு வர வைத்திருக்கிறது.

சீன நாட்டு புத்த துறவிகளுக்காக ராஜசிம்ம பல்லவன் நாகைபட்டினத்தில் புத்த விகாரமே கட்டி கொடுத்திருக்கிறார். சீனர்களுக்கு பல்வர்களோடு இருந்த வணிக உறவு சோழர்கள் காலத்தில் வரிவடைந்திருக்கிறது. மாமன்னர் ராஜராஜனும், ராஜேந்திர சோழனும் சீனர்களோடு வணிக உறவு வைத்திருந்துள்ளனர். முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் வணிக உறவை வலுப்படுத்த தமிழக வணிகக்குழு ஒன்று சீனாவுக்கு சென்றிருக்கிறது.

சீன நாட்டுக்கு சென்ற தமிழக வணிகர்களுக்காக குப்லகான் என்ற சீன அரசர் சிவன் கோயில் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். சீனம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் பொறித்த கல்வெட்டு இந்த செய்தியை உறுதிபடுத்துகிறது. மார்க்கபோலோ, யுவன் பட்டுடா போன்ற கடற்பயணிகள் குறிப்பிட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய பட்டினம் பற்றி சீன நூல்களிலும் பல்வேறு குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

11 முதல் 14-ம் நூற்றாண்டு வரையிலான சீன காசுகள் தமிழ்நாட்டில் மதுரை, தரங்கம்பாடி, நெடுங்காடு பட்டுக்கோட்டை, மற்றும் புதுச்சேரியிலும் நூற்றுக்கணக்கில் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் பரவலாக சீன நாட்டு காசுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையே இருந்த வலுவான வணிக உறவு புலப்படுகிறது. சீன அதிபர் ஜி ஜின் பிங்கின் மாமல்லபுரம் வருகைக்கு பிறகு மீண்டும் தமிழ்நாடு சீனா இடையிலான உறவில் புதிய அத்தியாயம் ஆரம்பமாகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

Related Stories: