ஸ்டாக்ஹோம்: வேதியியலுக்கான நோபல் பரிசு, இந்தாண்டு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. லித்தியம் அயன் பேட்டரியை மேம்படுத்தியதற்காக இவ்விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.உலகின் மிக உயரிய விருதுகளில் நோபல் பரிசுக்கான, இந்த ஆண்டின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களில் மருத்துவம், இயற்பியலுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வேதியியல் துறைக்கான நோபல் விருதை தேர்வுக்குழு சுவீடனின் ஸ்டாக்ஹோமில் நேற்று அறிவித்தது.
இவ்விருது, வேதியியல் பேராசிரியர்களான அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஜான் குட்டெனப், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பானின் மிஜோ பல்கலைக்கழகத்தின் அகிரா யோஷினோ ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இன்றையக் காலக்கட்டத்தில் செல்போன் முதல் எலக்ட்ரிக் வாகனங்கள் வரை அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களையும் நீடித்து செயல்பட வைக்கும் லித்தியம் அயன் பேட்டரிகளை மேம்படுத்தியவர்கள் இவர்கள்தான்.