புதுடெல்லி: பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பிஎம்சி) 4,355 கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த வங்கியில் இருந்து வீட்டு வசதி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனமான எச்டிஐஎல், 2500 கோடி கடன் பெற்றதிலும் முறைகேடுகள் நடந்துள்ளதும் அம்பலமானது. இந்த கடனை திருப்பி செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்ட இந்நிறுவனத்தின் இயக்குனர்கள், முறைகேடுக்கு உதவிய வங்கி அதிகாரிகள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் ராகேஷ் வாதவான், சாரங் வாதவான் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரின் பெயரில் உள்ள 3,500 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.