நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு தயாரிக்கும் உரம் தோட்டக்கலைத்துறைக்கு வழங்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் 52வார்டுகளில் தினமும் 110 டன் குப்பைகள் சேரிக்கப்பட்டு வலம்புரிவிளை உரக்கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. மலைபோல் தேங்கி கிடக்கும் இந்த குப்பைகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. வருகிற 2ம் தேதிக்கு பிறகு மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை வலம்புரிவிளை உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லகூடாது என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 11 இடங்களில் குப்பைகளை கொண்டு உரமாக்கும் நுண்ணுயிர் உரக்கிடங்கு அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 6 செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தற்போது அனாதைமடத்தில் அமைந்துள்ள 2 உரமாக்கும் நுண்ணுயிர் உரக்கிடங்கில் குப்பைகளை உரமாக்கும் பணி தொடங்கப்பட்டு வருகிறது. உரமாக்கிய குப்பைகளை முதலில் தோட்டக்கலைத்துறைக்கு 2 டன் மாநகராட்சி வழங்கியது. தற்போது தமிழக அரசு கிராமப்புற வீட்டுக்காய்கறி உற்பத்தி திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் படி தோட்டக்கலைத்துறை 5 வெண்டை விதைகளுடன் உரமும் இலவசமாக வழங்கவுள்ளது. இதற்காக தோட்டக்கலைத்துறை நாகர்கோவில் மாநகராட்சியிடம் உரம் வழங்க கேட்டுள்ளது.