நாகர்கோவில்: கன்னியாகுமரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 3.60 கோடியில் இதய நோயாளிகளுக்கான கேத்-லேப் திறப்பு உள்பட 21 கோடி மதிப்பில் புதிய திட்டங்களின் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பங்கேற்று கேத் லேப்பை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை, தர்மபுரி, விழுப்புரம் மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் 2, 3 நாட்கள் வரை காத்திருக்காமல், உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சுயமாக மருந்து, மாத்திரைகளை வாங்கி உட்கொள்ள கூடாது. தமிழகத்தில் இதுவரை டெங்கு பாதிப்புக்கு உயிரிழப்புகள் இல்லை. தெலங்கானாவில் சமீபத்தில் 10 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிங்கப்பூரில் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு கடந்த மாதம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் உயிரிழப்புகள் இல்லை.