அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் ஒய்எஸ்ஆர் காங். எம்எல்ஏ கைது: ஆந்திராவில் அதிரடி

திருமலை: ஆந்திராவில் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆளும் கட்சி எம்எல்ஏ உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.  ஆந்திர மாநிலம், நெல்லூர் புறநகர் தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ.வாக இருப்பவர் கோட்டம்ரெட்டி தர் ரெட்டி. இவரது ஆதரவாளர் ஸ்ரீகாந்த் ரெட்டி. வெங்கடாசலம் மண்டல பரிஷத் மேம்பாட்டு அதிகாரி (எம்பிடிஓ) சரளா. இவர், எம்எல்ஏ.வுக்கு ஆதரவாக செயல்படவில்லை. இதனால், எம்எல்ஏ தர் ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர் காந்த் ரெட்டி ஆகியோர் சரளாவிடம், ‘உங்கள் வீட்டின் மின் இணைப்பு, குழாய் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும், வீட்டின் முன் பள்ளம் தோண்டப்படும்’ என்று மிரட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த சரளா, நெல்லூர் புறநகர் போலீசில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் 3 நாட்கள் தொடர்   போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இந்நிலையில், முதல்வர் ஜெகன் மோகன் நேற்று முன்தினம் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி கவுதம் சவாங்கிற்கு உத்தரவிட்டார். அதன் பேரில், நேற்று அதிகாலை 5.30 மணியளவில் நெல்லூர் புறநகர் போலீசார்  தர் ரெட்டியையும், காந்த் ரெட்டியையும் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், இருவரையும் நேற்று 11 மணியளவில் காவல் நிலைய ஜாமீனில்  விடுவித்தனர். இதுகுறித்து எம்எல்ஏ தர் ரெட்டி கூறுகையில், ‘என் மீது வீண் பழி சுமத்தி கட்சியிலிருந்து துரத்த வேண்டும் என்பதற்காக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகி பிரதாப்ரெட்டி எனக்கு எதிராக சூழ்ச்சி செய்து வருகிறார். மண்டல பரிஷத் வளர்ச்சி அதிகாரி சரளாவுடன் சேர்ந்து  எஸ்பி.யும்  எனக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். சரளா காவல் நிலையத்தில் புகார் அளிக்க செல்லும் போது பிரதாப்ரெட்டி உடனிருந்தார்,’’ என்றார்.

Related Stories: