ஓடும் பேருந்தில் மாரடைப்பால் டிரைவர் சாவு: பயணிகள் தப்பினர்

ஆலந்தூர்: சிறுசேரியில் இருந்து கோயம்பேடு நோக்கி மாநகர பேருந்து நேற்று சென்று கொண்டிருந்தது. தேனியை சேர்ந்த ராஜேஷ்கண்ணா (36) பஸ்சை  ஓட்டினார். வெங்கடேசன் (52) என்பவர் நடத்துனராக இருந்தார். பேருந்தில் 15க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். வேளச்சேரி 100 அடி சாலை சிக்னல் அருகே சென்றபோது டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் ஸ்டியரிங் மீது  மயங்கினார். இதனால், கட்டுப்பாட்டை இழந்த பஸ், சிக்னலுக்காக நின்றிருந்த வாகனங்கள் மீது மோதியது. அங்கிருந்த மதுரவாயலை சேர்ந்த கார் டிரைவர்  விஜய், (25) மின்னல் வேகத்தில் பஸ்சில் ஏறி பேருந்தை சாலையோரமாக  நிறுத்தினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர், பஸ் டிரைவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இந்த விபத்தில், 8 கார்கள் சேதமடைந்தன. இதுகுறித்து கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: