சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதேபோல விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தமாகா, சமக உள்ளிட்ட தலைவர்களை அதிமுக தலைவர்கள் சந்தித்து ஆதரவு கேட்டனர். ஆனால், வேட்புமனு தாக்கல் முடியும் வரை பாஜவிடம் அதிமுக தரப்பில் ஆதரவு கேட்கப்படவில்லை. இப்படி பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக தரப்பில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பிற்பகல் சென்னை தி.நகர் பாஜ தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.
அங்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் பாஜ தலைவர் இல.கணேசன், பாஜ பொது செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருமாறு அமைச்சர் ஜெயக்குமார் கேட்டார்.