சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரிப் படுகையை எண்ணெய் வயல்களாக மாற்றும் நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக காவிரி பாசன மாவட்டங்களில் மேலும் 44 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. காவிரி பாசன மாவட்டங்களை சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு காவிரி பாசன மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் புதிய 44 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் இரு உரிமங்களின் அடிப்படையில் கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய நான்கு தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திலும் அமைக்கப்படவுள்ளன. காவிரி பாசன மாவட்டங்களில் ஏற்கனவே 200-க்கும் கூடுதலான எண்ணெய்க் கிணறுகளை அமைத்துள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம், அவற்றிலிருந்து கோடிக்கணக்கான டன் கச்சா எண்ணெயை எடுத்து வருகிறது.