பாக்தாத்: ஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். ஈராக்கில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் அரசின் ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகின்றது. இந்த போராட்டம் நேற்று மூன்றாவது நாளை எட்டியது. பல்வேறு பகுதிகளிலும் போராட்டக்காரர்கள் திரண்டு அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு போராட்டங்களுக்கு தடை விதித்து பிரதமர் அதெல் அப்தெல் மாதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினார்கள். பாக்தாத் மற்றும் பல்வேறு தெற்கு நகரங்களில் போராட்டக்காரர் மற்றும் போலீசார் இடையே வன்முறை வெடித்தது.