வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழையால், சதுரகிரி சுந்தரம்காலிங்கம் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்தனர். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலும் மழைநீர் புகுந்தது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், ஆனந்தவள்ளியம்மன் சன்னதியில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. இதற்காக நேற்று முன்தினம் முதல் வரும் 8ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 20 பேர் உள்ளிட்ட 50 பேர், சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடக்கும் நவராத்திரி விழாவுக்கு சென்றனர். விடிய, விடிய மழை கொட்டியதால் ஓடைப்பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால், நவராத்திரி விழாவுக்கு சென்ற பக்தர்கள் கீழே இறங்க அனுமதிக்கப்படவில்லை.