கனரா வங்கிக்கு எதிராக அறப்போராட்டம் வங்கி பணியில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு: வைகோ எச்சரிக்கை

சென்னை: தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை புறக்கணிப்பு செய்யும் கனரா வங்கிக்கு எதிராக அறப்போராட்டம் நடத்தப்படும் என்று  வைகோ எச்சரித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, என்எல்சி, பெல் மற்றும் அஞ்சல்துறை வேலைவாய்ப்புகளில், தமிழ்நாட்டு இளைஞர்களை  புறக்கணித்துவிட்டு, வெளி மாநிலத்தவர்க்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் கொடுமை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

திருச்சி ரயில்வே கோட்டத்தில் காலியாக உள்ள 800 உதவியாளர் உள்ளிட்ட ‘குரூப் டி’ பணி இடங்களுக்கு, ரயில்வே பணியாளர் தேர்வு ஆணையம்  தேர்வு செய்துள்ள 528 பணியாளர்களுள், 475 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மதுரை ரயில்வே கோட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 572  பேர்களுள், வெறும் 11 பேர் மட்டுமே, தமிழ்நாட்டில் இருந்து தேர்வு பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாகப் பணியில் சேர்வதற்கு, அடிமை  எடப்பாடி அரசு வழி செய்துள்ளது. இப்போது, மத்திய அரசு  வங்கிப் பணியாளர் தேர்வுகளிலும், வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நுழையும் படலம் தொடங்கி இருக்கிறது. இந்தியா முழுவதும் வங்கிப் பணிகளில், அந்தந்த மாநில மொழிகளைப் பேசத் தெரிந்தவர்களை மட்டுமே தேர்வு செய்வது என்ற நடைமுறையில்,  தமிழ்நாட்டில் படித்தவர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். இதனை மாற்றி, வெளி மாநிலத்தவரை தேர்வு செய்வது, வங்கிக்கு வருகிற  பொதுமக்களை கடுமையாகப் பாதிக்கும்.

மேலும் இவர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டால், தமிழ்நாட்டு வங்கிகளில் மீண்டும் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு  விடும். வங்கிப் பணிகள் பாதிக்கப்படும். தமிழ்மொழி அறியாதவர்களை, மொழி அறிவு இருப்பதாக தகிடுதத்தம் செய்து, கனரா வங்கியில் எழுத்தர் பணி இடங்களுக்கு நியமனம் செய்துள்ள  உத்தரவை, கனரா வங்கி திரும்பப் பெற வேண்டும். இல்லையேல், தமிழ்நாட்டில் பட்டதாரி இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோவதை தடுத்து நிறுத்த, அறப்போராட்டத்தை கனரா வங்கி  எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: