திருச்சி: திருச்சியில் இந்திரா காந்தி மகளிர் உதவி பேராசிரியையை அதிமுக பிரமுகர் கடத்த முயன்றதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் ஆங்கில உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். வழக்கம் போல் தனது தோழியுடன் கல்லூரிக்கு புறப்பட்ட மகாலட்சுமியை அதிமுக பிரமுகர் வணக்கம் சோமு என்பவர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்து கடத்த முயன்றுள்ளார். அச்சமயம் இருவரும் கூச்சலிடவே தோழியை தள்ளிவிட்ட வணக்கம் சோமு மகாலட்சுமியை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கடத்தி சென்றுள்ளார். இது தொடர்பாக மகாலட்சுமியின் தாய் நாகலட்சுமி அளித்த புகாரின் பேரில் கோட்டை காவல்நிலைய போலீசார் உடனடியாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.