ஆம்பூர் தென்னந்தோப்பில் கார், 6 பைக்குடன் நின்ற கர்நாடக போலீசை மடக்கிய தமிழக போலீசார்: மப்டியில் இருந்ததால் தீவிர விசாரணை

ஆம்பூர்: ஆம்பூர் தென்னந்தோப்பில் கார், 6 பைக்குகளுடன் கர்நாடக போலீசார் மப்டியில் நின்று கொண்டு இருந்ததால், அவர்களை தமிழக போலீசார் மடக்கி தீவிர விசாரணை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர்  மாவட்டம், ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் நேற்று அதிகாலை 6 பைக்குகளை நிறுத்தி அதன் அருகே 5 பேர் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். சற்று தொலைவில் ஒரு காரும் நிறுத்தி  வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், அவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் கன்னட மொழியில் பேசியதால், சந்தேகம் அடைந்த பொதுமக்கள், ஆம்பூர்  டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள், கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி காவல்  நிலைய போலீசார் என்றும், ‘பைக் திருட்டு வழக்கு  தொடர்பாக வாணியம்பாடி நியூ டவுன் பகுதியை சேர்ந்த ரியான்(21) என்பவரை  நேற்று முன்தினம் கைது செய்தோம். அவர் கொடுத்த தகவலின்பேரில் இப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த 6 பைக்குகளை பறிமுதல் செய்து கொண்டு வந்தோம்’ என்றும் கூறினர்.

 அதுதொடர்பான எப்ஐஆர் நகலையும் காண்பித்தனர். ஆனால், 5  பேரும் மப்டியில் இருந்ததால், சந்தேகம்  அடைந்த ஆம்பூர்  போலீசார், எப்ஐஆர் நகலை சரி பார்த்தனர். பறிமுதல் செய்யப்பட்ட  வாகனங்களை பெங்களூருக்கு கொண்டு செல்லாமல்,  இங்கு எதற்கு நிறுத்தி வைத்துள்ளீர்கள் என துருவி, துருவி விசாரித்தனர். அதற்கு  அவர்கள், ‘ஓட்டலில் சாப்பிடுவதற்காக பைக்குகளை நிறுத்தி வைத்ததாக’’  தெரிவித்தனர். இதையடுத்து, பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி போலீஸ்  உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்து உறுதிப்படுத்தினர்.  அதன்பின்னர், கர்நாடக போலீசாரை அனுப்பி வைத்தனர். இதனால்  அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: