பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றில் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையான ஓவாமலை பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 2 மணிநேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் 10க்கும் மேற்பட்ட ஓடைகளில் திடீரென தண்ணீரின் அளவு அதிகரித்து கரை புரண்டு ஓடியது. இந்த தண்ணீர் சித்தரேவு - அய்யம்பாளையம் மருதாநதி பாலத்தின் அடியில், ஒன்று சேர்ந்து காட்டாற்று வெள்ளமாக வந்தது. அய்யம்பாளையம் பகுதியில் மழை இல்லாதபோதிலும், திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தை அப்பகுதி வழியாக சென்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்த காட்டாற்று தண்ணீர் சித்தரேவு அருகேயுள்ள தாமரைகுளத்திற்கு சென்றது.