சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் இன்று மேட்டூரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு 3 மணி நேரம் மேல் ஆகியும் இன்னும் முதலமைச்சர் வராததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றும் இன்றும் சேலத்தில் முகாமிட்டு இருக்கிறார்கள். அவர் சேலத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மூலம் தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று வருகிறார். இந்த அடிப்படையில் தான் நேற்று வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்றார். இதனைத்தொடர்ந்து இன்று காலை 9மணி அளவில் மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களிடம் , மேட்டூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெறுகிறார் என்று அறிவிக்கப்பட்டது.