தென்தாமரைகுளம்: தென்தாமரைகுளம் அருகே சாமிதோப்பு பஞ்சாயத்துக்குட்பட்ட செட்டிவிளை பகுதியில் பூலாங்குளம் மற்றும் அதனை சுற்றி அமைந்துள்ள வயல்வெளிகள், வாழைதோட்டங்கள், தென்னன்தோப்புகள் செல்லும் வழியில் பார்த்தீனியம் என்னும் விஷசெடிகள் அதிகமாக வளர்ந்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழையினால் அதிகளவில் பரவலாக ஒரு ஆள் உயரத்துக்கு மேலாக வளர்ந்து காணப்படுகிறது. குளத்துக்கு குளிக்க செல்பவர்கள் மற்றும் தோட்டங்களுக்கு செல்பவர்கள் எதிரே வாகனங்கள் வரும்போது இந்த செடியில் உடலானது படும்போது அந்தஇடத்தில் ஒரு வித அரிப்பு போன்று ஏற்படுவதாகவும் அந்த பகுதிகளில் பணிபுரிவோர்க்கு சிறிய அளவில் ஆஸ்த்மாவும் ஏற்படுவதாக அப்பகுதிகளில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் மற்றும் குளிக்க செல்லும் பொதுமக்களும் புகார் கூறுகின்றனர்.