ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட தீவிரவாதிக்கு ஓய்வூதியம் அளிக்கும் உலகின் ஒரே நாடு பாகிஸ்தான்: இம்ரான் கான் பேச்சுக்கு விதிஷா மைத்ரா பதிலடி

நியூயார்க்: பயங்கரவாதிகளுக்கு பென்சன் தரும் ஒரே நாடு பாகிஸ்தான் தான் என இந்தியா தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் பாகிஸ்தான் மண்ணில் இருப்பதை இம்ரான்கானால் மறுக்க முடியுமா என்று இந்தியாவின் வெளியுறவுத்துறை முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கேள்வி எழுப்பியுள்ளார். ஐநா பொதுச்சபை கூட்டத்தில் இம்ரான் கான் பேசியதற்கு பதில் உரையாக இந்தியாவின் வெளியுறவுத்துறை முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா பேசியதாவது:- ஐநா சபையால் பயங்கரவாதியாக  அறிவிக்கப்பட்ட நபருக்கு பென்சன் அளிக்கும் ஒரே நாடு  தாங்கள்தான் என்பதை பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளுமா? அணு ஆயுத போர் வெடிக்கும் என்று இம்ரான் கான் மிரட்டுவது  சிறந்த நிர்வாகிக்கான தகுதி இல்லை என்றும் கூறியுள்ளார்.

தனது வாக்குறுதியை உறுதிப்படுத்தும் வகையில்,  ஐநா பார்வையாளர்களை அழைத்து தனது மண்ணில் பயங்கரவாதிகள் இல்லை என்பதை சரிபார்க்க இம்ரான்கான் அழைப்பு விடுக்க வேண்டும். ஐநா பட்டியலிட்டுள்ள பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதி உதவி அளித்து வருகிறது. ஐநாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட 130 பேர் தங்கள் மண்ணில் இல்லை என்பதை பாகிஸ்தானால் மறுக்க முடியுமா?  பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது.” இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தால் இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் வெடிக்கலாம் என்று பேசியிருந்தது கவனிக்கத்தக்கது.

Related Stories: