திருவொற்றியூர்: திருவொற்றியூரில் சகதி சாலையை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து, பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி நகர் மணலி விரைவு இணைப்பு சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடிவதில்லை. அவசரத்திற்கு ஆட்டோ, ஆம்புலன்ஸ், குடிநீர் லாரி கூட வர முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பாக்கியம் தலைமையில் ஏராளமான பெண்கள் சாலையை சீரமைக்காத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து நேற்று மகாலட்சுமி நகர் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.