*மக்கள் பீதி
கோவை : தமிழக-கேரள எல்லை வாளையார் அடுத்த கஞ்சிக்கோடு பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அடுத்துள்ள மலம்புழா காட்டு பகுதிகளிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் வாளையார், மலம்புழா, கஞ்சிக்கோடு, கொட்டேக்காடு, மருதுரோடு, ஆரங்கோட்டுகுளம்பு, படலிக்காடு ஆகிய இடங்களில் உலா வந்து அங்குள்ள தோட்டப்பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இருப்பினும் வனப்பகுதிக்குள் சிறிது தூரம் சென்று மீண்டும் அவை ஊருக்குள் திரும்பிவிடுகின்றன. கஞ்சிக்கோடு - கொட்டேக்காடு, வாளையார் பி டிராக் தண்டவாளங்களை இடையில் அடிக்கடி காட்டு யானைகள் கூட்டமாக கடந்து செல்வதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றன. அதேபோல் சாலைகளிலும் முகாமிட்டுள்ள காட்டுயானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வனத்துறையினர் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.