சென்னை: நேர்காணலில் தேர்வு செய்த 3 பேர் பட்டியலுடன் கே.எஸ்.அழகிரி டெல்லி சென்றுள்ளார். பட்டியலை இறுதி செய்து, நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளரை கட்சி தலைமை இன்று அறிவிக்கிறது. வேட்பாளர் தேர்வுக்கான விருப்ப மனுக்கள் கடந்த 3 நாட்களாக சத்தியமூர்த்தி பவனில் பெறப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் இந்த வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. இதில், மூத்த தலைவர் குமரி அனந்தன், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன், பரப்பாடி காமராஜ், மாவட்ட தலைவர்கள் சிவக்குமார், சங்கரலிங்கம், முன்னாள் எம்எல்ஏ வேல்துரை என 26 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அவர்களிடம் நேற்று முன்தினம் மாலை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் நேர்காணல் நடத்தினர். இறுதியாக 3 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டது.