பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரங்கு அருவிக்கு கடந்த சில வாரமாக தண்ணீர் ஆர்ப்பரித்து ரம்மியமாக கொட்டியது. இதனால், அதில் குளித்து மகிழ உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. விடுமுறை நாட்கள் மட்டுமின்றி பிற நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்திருந்ததால், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆங்காங்கே திடீர் என பலமணிநேரம் கன மழை பெய்துள்ளது. இந்த மழையால் நேற்று மதியம், குரங்கு அருவியின் மேல் பகுதியில் உள்ள எஸ்டேட் பகுதியில் ஆங்காங்கு தேங்கியிருந்த தண்ணீருடன் மழைநீரும் கரைபுரண்டு வர துவங்கியது.