புதுடெல்லி: தீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை எம்பி கனிமொழி மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேலிடம் நேற்று கொடுத்துள்ளார்.
மதுரையில் தொல்லியல் துறை அலுவலகம் அமைத்தல், அதேப்போல் கீழடியில் அருங்காட்சியகம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கனிமொழி எம்பி, மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேலிடம் நேற்று கொடுத்துள்ளார். அப்போது காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி. எஸ்.வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.மத்திய அமைச்சரிடம் கொடுத்த கடிதத்தின் விவரம் வருமாறு,”தமிழர்களின் சங்க காலம் 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்கிற அரிய கண்டுபிடிப்பை கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வின் மூலம் அறிந்து கொள்ளப்பட்டுள்ளது. இது கலாசார வரலாற்றில் மிகப்பெரும் திருப்புமுனை என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.தமிழக தொல்லியல் துறை, `கீழடி முதல் வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்’ என்கிற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை தமிழ் எழுத்து வடிவங்கள் கி.மு.6ம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளது என்பதற்கு உரிய சாட்சியமாக அமைந்துள்ளது. குறிப்பாக கீழடியில் நடைபெற்ற நான்காம் கட்ட அகழ்வாய்வில் தமிழர்கள் இலக்கியத்திலும் எழுத்துக் கலையிலும் 2,600 ஆண்டுகளுக்கு முன்னரே வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர் என்பதை, மறுக்க முடியாத சான்றாகத் தெரியவந்துள்ளது. பழங்கால தமிழர் நாகரிகம் என்பது, உலகின் மிகப் பழமையான நாகரிகம் என்று சொல்லப்பட்டு வந்த பிறகு, மேலும் வலு சேர்க்கும் வகையில் இது உள்ளது. அத்துடன் இந்திய வரலாற்றையே இனி தமிழர்கள் வரலாற்றிலிருந்து தான் முன்னோக்கி பார்க்க வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இதைத்தவிரகீழடியில், நான்காவது முறையாக நடத்தப்பட்ட அகழ்வாய்வின் கண்டு பிடிப்புகள், கரிம மாதிரிகள் உள்ளிட்டவைகள், அமெரிக்காவிலும், இத்தாலியிலும் உள்ள புகழ் வாய்ந்த சோதனை கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வேளாண் தொழில்களில் காளைகள் - மிருகங்களை, தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.