சென்னை: வெங்காயத்தை தொடர்ந்து, பூண்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.250க்கு விற்கப்படுவதால் இல்லத்தரசிகளுக்கு ரசம் வைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.பூண்டு விளைச்சல் செய்ய சரியான குளிர்ச்சி நிலையும், சூரிய வெப்பநிலையும் அவசியம் என்பதால் வடமாநிலங்களில் விளைச்சல் செய்யப்படுகிறது. வடமாநிலங்களான மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற பகுதியில் பூண்டு விளைச்சல் செய்யப்பட்டு தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.தற்போது பூண்டு விலை வரலாறு காணாத வகையில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிற்கு மலைப்பூண்டு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இது தற்போது அடியோடு நின்றுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் தேனி, கம்பம், போடி உள்ளிட்ட பகுதியில் பூண்டு விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் பூண்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.