சென்னை: நாங்குநேரி தொகுதியில் போட்டியிட சீட்டு வாங்குவதற்கு காங்கிரசில் கடும் போட்டி நிலவியுள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் விருப்ப மனுக்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 25ம் தேதி மாலை 6 மணிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார்.இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று காலை முதல் விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்பட்டன. காங்கிரஸ் மாநில பொது செயலாளர் சேலம் பாலசுப்பிரமணியன், காங்கிரஸ் துணை தலைவர் தாமோதரன் ஆகியோர் விருப்ப மனுக்களை அளித்தனர்.