ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் மறைவிடத்தை குறிவைத்து அரசு படை நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 35 பேர் பலி..!

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாதிகளை குறிவைத்து நடந்த தாக்குதலில் திருமண வீட்டில் இருந்த பொதுமக்கள் 35 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளை தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்திவரும் தலிபான்கள் சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தி போட்டி அரசாங்கத்தையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தெற்கு ஹெல்மன்ட் மாகாணத்தில் பயங்கரவாதிகளை குறிவைத்து நடந்த தாக்குதலில் ஒரு திருமண வீட்டில் இருந்தவர்கள் 35 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர். தெற்கு ஹெல்மன்ட் மாகாணத்துக்குட்பட்ட முசா காலா மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சிறப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அம்மாவட்டத்துக்கு ராணுவ வீரர்கள் விரைந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக அமெரிக்க போர் விமானங்களும் சென்றன. இருப்பினும் இந்த தாக்குதலில் ஒரு திருமண வீட்டில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 35 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆப்கானிஸ்தான் நாட்டின் பாராளுமன்றத்துக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார். இந்த படைகளுக்கு ஆதரவாக அரசுக்கு விசுவாசமான தன்னார்வலர்கள் படையும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: