தஞ்சை பெரிய கோவில் நுழைவு வாயிலில் துணியில் சுற்றப்பட்டு கேட்பாரற்ற நிலையில் குழந்தை மீட்பு

தஞ்சை: தஞ்சை பெரிய கோவில் என அழைக்கப்படும் புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் மராட்டா நுழைவு வாயிலில் நேற்று முன்தினம் இரவு துணியில் சுற்றப்பட்டு கேட்பாரற்ற நிலையில் குழந்தை ஒன்று கிடந்தது. இதைக் கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார், அந்த பெண் குழந்தையை மீட்டனர். பின்னர் உடனே அவர்கள் குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற குழந்தைகள் மைய அதிகாரிகள் போலீசாரிடம் இருந்து குழந்தையை பெற்றுக்கொண்டனர். மேலும் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் சேர்த்தனர்.

பிறந்து 10 நாட்களே ஆன அந்த குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த குழந்தையை கோவிலில் விட்டு சென்றது யார்? எதற்காக குழந்தையை கோவிலில் விட்டு சென்றார்கள்? என தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து யாருக்கும் தகவல் தெரிந்தால் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையின் விவரங்கள் சேகரிக்கபட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: