வரி சலுகைளை அறிவித்த மத்திய நிதியமைச்சர்; மும்பை பங்குச்சந்தைகள் வராலாறு காணாத உயர்வு; முதலீட்டாளர்கள் உற்சாகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் உயர்ந்து 37,767.13 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 450 புள்ளிகள் உயர்ந்து 11,156.70 என்ற வர்த்தகமாகி வருகிறது. காலையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் கிடுகிடு உயர்வுடன் வர்த்தமாகிறது. உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைப்பால் பங்குச்சந்தையில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக பங்குச்சந்தையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை நேற்று கால் சதவீதம் குறைத்தது. இருப்பினும், இன்னும் எந்த அளவுக்கு வட்டி குறைக்கப்படும் என்பதில் ஸ்திரமற்ற நிலை நிலவுகிறது.

இதனால் சர்வதேச பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. இதுதவிர, மத்திய அரசு வரி வருவாய் கடந்த ஆண்டை விட 17.5 சதவீதம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வரி வருவாய் அந்த அளவு உயர வாய்ப்பில்லை என தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே பொருளாதாரம் மந்த நிலையில் உள்ள நிலையில், இது முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகளை குறைக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

உள்நாட்டு தொழில் உற்பத்தி நிறுவனங்கள் மீதான வரியை 22 சதவீதத்துக்கு குறைக்க பரிந்துரை செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். தொழில் உற்பத்தி துறையில் தொடங்கப்படும் புதிய நிறுவனங்களுக்கு வரியை 15 சதவீதமாக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்படும் என்றும், 2019-ம் ஆண்டு அக்டோபர் 1.ம் தேதிக்கு பிறகு தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இவ்வாறான பல்வேறு அறிவிப்புகளை அடுத்து சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள் தற்போது உயர்வுடன் வர்த்தமாகிறது.

Related Stories: