கெலமங்கலம் அருகே வாலிபர் எரித்து கொலை?

தேன்கனிக்கோட்டை: கெலமங்கலம் அருகே வீட்டின் முன்பு வாலிபர் ஒருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப் பட்டார். அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி  மாவட்டம் கெலமங்கலம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் மூக்கப்பா. இவருடைய  மனைவி சுசீலா (38). இவர் இன்று காலை 6 மணயளவில் வாசல் தெளிப்பதற்காக வெளியே  வந்தார். அப்போது கதவை திறந்தபோது வாசற்படியில் உடல் முழுவதும்  எரிக்கப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் கிடந்தது. இதனை  பார்த்து அதிர்ச்சியடைந்த சுசீலா உடனடியாக மூக்கப்பாவிடம் தெரிவித்தார்.  

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து  வந்த டிஎஸ்பி சங்கீதா, கெலமங்கலம் காவல் ஆய்வாளர் சிவலிங்கம், எஸ்ஐ  செல்வராகவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால்  எரிந்த நிலையில் கிடந்த வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது  தெரியவில்லை. இதையடுத்து அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் ஓசூர்  அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து  எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்?  யாரேனும் கொலை செய்துவிட்டு பின்னர் வீட்டின் முன்பு சடலத்தை போட்டு  எரித்து விட்டு சென்றனரா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? உள்ளிட்ட பல கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: