சென்னை: பள்ளிக்கரணையில் அதிமுக பேனர் சரிந்து விழுந்து உயிரிழந்த பெண் இன்ஜினியர் குடும்பத்துக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறினார். தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை, நெமிலிச்சேரி, பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி கீதா. இவர்களின் மகள் சுபஸ்ரீ (23). துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 12ம்தேதி மதியம் தனது ஸ்கூட்டியில் பள்ளிக்கரணை ரேடியல் சாலை வழியாக வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அப்பகுதியில் வைத்திருந்த அதிமுக பிரமுகர் இல்ல வரவேற்பு பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது சரிந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறி சுபஸ்ரீ சாலையில் விழுந்தார். அந்த சமயத்தில் கோவிலம்பாக்கம் நோக்கி சென்ற தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறி, இறங்கியதில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.