திருவண்ணாமலை: விவசாய நிலத்தை அபகரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சுமை தூக்கும் தொழிலாளி குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றதால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். டிஆர்ஓ ரத்தினசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் வின்சென்ட் ராஜசேகர், துணை ஆட்சியர் (பயிற்சி) மந்தாகினி, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பரிமளா உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள், கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 348 பேர் மனு அளித்தனர். இந்நிலையில், செங்கம் தாலுகா எறையூர் கிராமத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி பூமிநாதன்(37) என்பவர், அவரது மனைவி நவநீதம், தாய் சுந்தரி, உறவினர் லட்சுமி ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அலுவலக நுழைவு வாயில் அருகே நின்றிருந்த நான்கு பேரும், திடீரென பாட்டிலில் மறைத்து கொண்டுவந்த மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்த அங்கிருந்த போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தினர்.