கொல்கத்தா: சாரதா சிட்பண்ட் மோசடியில் கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாரை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட தடையை கொல்கத்தா உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் சுமார் 4,000 கோடி ரூபாய் வரை பண மோசடியில் ஈடுபட்டது. அந்த வழக்கை விசாரிக்க, சிறப்பு விசாரணை அதிகாரியாக ஐ.பி.எஸ் அதிகாரி ராஜிவ் குமார் நியமிக்கப்பட்டார். கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனரான இவர், தற்போது மேற்கு வங்க சிஐடி கூடுதல் இயக்குநர் ஜெனரலாக உள்ளார். இவர் தலைமையில்தான் சாரதா மோசடி வழக்கில் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டிருந்தது. இவரின் தலைமையில் விசாரணை முழுமையாக நடைபெறவில்லை என்பதால், 2014ம் ஆண்டில் இந்த வழக்கு சிபிஐ.க்கு மாற்றப்பட்டது. அதில், பண முறைகேடு விவகாரம் தொடர்பான ஆவணங்களை இவர் அழித்தார் சிபிஐ குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக, அவரைக் கைது செய்வதற்கு சி.பி.ஐ முயற்சி செய்த போது, மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு தடுத்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.