சென்னை தாம்பரம் அருகே அனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு சுபஸ்ரீ என்பவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை தாம்பரம் அருகே அனுமதியின்றி வைத்த பேனரால் விபத்து ஏற்பட்டு சுபஸ்ரீ என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பேனர் வைத்தவர்கள் மீது பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணம் விளைவித்தல், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் குற்றம் செய்தது பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக தண்ணீர் லாரி ஓட்டுநர் ஜேக்கப் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற 23 வயது பெண் கனடா செல்வதற்காக இன்று தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதி முடித்துவிட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது வந்த தண்ணீர் லாரியில் சிக்கி படுகாயமடைந்தார். காயமடைந்த அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திவ ருகின்றனர். சுபஸ்ரீ குடும்பத்துக்கு ஒரே பெண்ணாக இருந்துள்ளார். அரசியல் மற்றும் குடும்பக் காரணங்களுக்காக பேனர் வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: