மும்பை: மும்பையில் மக்கள் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு முன் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வருவது வழக்கமான நிகழ்வாகும். மும்பையில் இன்று சுமார் 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன. இதனை முன்னிட்டு சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லும் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமலிருக்க சுமார் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பந்தல்கள் அமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைக்கப்படுகின்றன. விநாயகர் சிலைகள் கரைப்பை முன்னிட்டு லால்பாக்கா ராஜா என்ற பிரம்மாண்டமான விநாயகர் சிலைக்கு முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட 129 இடங்களில் கடலில் கரைக்கப்படுகின்றன.