இலங்கை கடற்படை அட்டூழியம் தமிழக மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு

மணமேல்குடி : கோட்டைப்பட்டிணம் அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடற்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் 233 விசை படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப்பட்டினத்தை சேர்த்த ஹபீப் ரகுமான் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே ஊரை சேர்ந்த  ஜெரோன்(24), கெம்ப்லஸ்(56), மெக்சன்(29), ரவி (19) ஆகிய 4 பேரும் சென்றனர்.

நேற்று மதியம் 12 மணியளவில் கோட்டைப்பட்டினத்திலிருந்து 35 நாட்டிக்கல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ரோந்து படகு மூலம் மீனவர்கள் படகை இடித்து நிறுத்தினர். பின்னர் அவர்களது மீன்பிடி வலைகளை அறுத்து கடலுக்குள் எறிந்தனர். படகில் இருந்த 4 பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: