திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் கடலில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 4 பேர் கடல் அலையில் சிக்கி மூழ்கினர். பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது இந்த சோகம் அரங்கேறி உள்ளது. மணலி பல்ஜிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (15), பாடசாலை தெருவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று பிறந்தநாள். அதனால் தன்னுடன் படிக்கும் சக மாணவர்கள் 8 பேர் ராகேஷ் வீட்டுக்கு நேற்று மதியம் வந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர்.
பின்னர் 8 மாணவர்களும் மணலியில் இருந்து சைக்கிளில் திருவொற்றியூர் கே.வி.கே. குப்பம் அருகே கடற்கரைக்கு வந்தனர். மணலி மாத்தூரை சேர்ந்த தனுஷ் (15), சின்ன சேக்காட்டை சேர்ந்த ஜெயபாரதி (15), தாமரை குளம் பகுதியை சேர்ந்த கோகுல் நாத் (15), பெரிய தோப்பை சேர்ந்த சுனில்குமார் (15) ஆகிய 4 மாணவர்கள் கடலில் இறங்கி குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். மற்ற மாணவர்கள் கரையில் அமர்ந்து குளிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென்று கடலில் தோன்றிய ராட்சத அலை 4 மாணவர்களையும் உள்ளே இழுத்துச் சென்றது.