3 மகள்களுக்கு விஷம் தந்து தாய் தற்கொலை : கணவரின் கள்ளத்தொடர்பால் விபரீதம்

கோவை: நீலகிரி மாவட்டம் கூடலூர் பெரியார் நகரை சேர்ந்தவர் முருகன் (36). இவர் அங்குள்ள எஸ்டேட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வனிதா (34). இவர்களுக்கு அபிக்‌ஷா (13), அனுஸ்ரீ (10), அக்‌ஷதா (8) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். முருகன் குடிப்பழக்கம் உடையவர். இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். மேலும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் முருகன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது. இதை வனிதா கண்டித்தும் முருகன் கேட்கவில்லை. இதனால் மனமுடைந்த வனிதா பாலில் விஷம் கலந்து 3 மகள்களுக்கு கொடுத்து விட்டு தானும் குடித்தார். சிறிது நேரத்தில் 4 பேரும் மயங்கி கிடந்தனர்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர். 4 பேரையும் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வனிதா இன்று காலை இறந்தார். மற்ற 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வனிதா விஷம் குடிப்பதற்கு முன் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் நான், எனது குழந்தைகள் சாவுக்கு எனது கணவர் முருகன் மற்றும் அவரது கள்ளக்காதலிதான் காரணம் என எழுதி வைத்திருந்தார். இது குறித்து வனிதாவின் தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் போலீசார் வழக்குப்பதிந்து முருகனை கைது செய்தனர்.

Related Stories: