மீண்டும் அரசியலுக்கு திரும்புகிறார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்: செப்.25-ல் ராஷ்டிரிய சமாஜ் பிரகாஷ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்..!

உத்திரபிரதேசம்: மீண்டும் அரசியலுக்கு திரும்புகிறார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். உத்தரப்பிரதேசத்தின் முக்கிய கட்சியாக விளங்கும் சமாஜ்வாதியின் வேட்பாளராக 10 ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் களமிறங்கினார். கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சஞ்சய் தத், சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். தேர்தலையொட்டி மும்பை வெடிகுண்டு சம்பவத்தில் சஞ்சய் தத் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அவரின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைக்க மறுத்தது.

இதைத் தொடர்ந்து சஞ்சய் தத் வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொண்டார். இந்நிலையில் 60 வயதான சஞ்சய் தத் மீண்டும் அரசியலுக்கு வர உள்ளதாக மகராஷ்டிர மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளர்ச்சித்துறை அமைச்சர் மகாதேவ் ஜங்கர் கூறியுள்ளார். தற்போது மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி இருக்கும் ராஷ்டிரிய சமாஜ் பிரகாஷ் கட்சியில் அடுத்த மாதம் 25ஆம் தேதி சஞ்சய் தத் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சஞ்சய் தத்தின் தந்தையான மறைந்த நடிகர் சுனில் தத், மும்பை வடக்கு மக்களவை காங்கிரஸ் உறுப்பினராக 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: