கடலூர் : கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சாதாரண உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் பேசுகையில், சாதாரண உள்ளாட்சி தேர்தல்கள் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஊரக பகுதிக்கு 2883 வாக்குச்சாவடிகளும், நகராட்சிக்கு 359 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சிக்கு 296 என மொத்தம் 3,538 வாக்குச்சாவடிகளும் அமைத்து வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட வாக்குச்சாவடிகள் அனைத்திலும் அடிப்படை வசதியான குடிநீர், கழிவறை வசதி, மின்சாரம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான சாய்வு தளம் ஆகியவை அனைத்தும் உள்ளதை உறுதி செய்யவேண்டும். இதற்காக ஊரக பகுதிக்கு உதவி இயக்குநர் நிலையில் உள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் நகர்புறத்திற்கு உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்), பேரூராட்சி செயலாளர்கள், நகராட்சி ஆணையர்கள் ஆகியோர் ஆய்வு செய்து இறுதி அறிக்கையை ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.