* சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி
பெரியகுளம் : கும்பக்கரை அருவிப்பகுதியில் சேதத்தை சீரமைக்கும் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே 8 கிமீ தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவு வருகின்றனர். அருவிப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பிற்காக இரும்பு கம்பிகள் போடப்பட்டிருந்தன.
கடந்த கஜா புயல் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், இரும்பு கம்பிகள் முற்றிலுமாக அடித்துச்செல்லப்பட்டு சேதமடைந்தன. தற்போது கும்பக்கரை அருவியில் போதுமான நீர்வரத்து இல்லாததால் சேதமடைந்த கம்பிகளை அப்புறப்படுத்தி புதிய கம்பிகள் அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இப்போது தண்ணீர் சீராக வருவதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.