மதுரை: நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி மீட்பது குறித்து தலைமைச்செயலர் தலைமையில், துறை செயலர்கள், 13 மாவட்ட கலெக்டர்கள், எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும். இக்குழு ஆலோசனைக்கூட்டம் நடத்தி, அக். 3க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த வக்கீல் அருண்நிதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள், நீர்வழித் தடங்களிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், தூர்வாரி தண்ணீரை தேக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார்.இதேபோல் ஐகோர்ட் கிளையின் எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில், பல்வேறு பகுதியிலுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட் கிளை, ‘‘நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி ஆழப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்ய வக்கீல்களைக் கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்படுகிறது. நீர் மேலாண்மைக்கு தேவையான ஆலோசனைகளை நிபுணர்கள் ஏ.சி.காமராஜ், நடராஜன் ஆகியோர் வழங்கலாம். தமிழகத்திலுள்ள கண்மாய், குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் பற்றிய விபரங்களை, பொதுப்பணித்துறை மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் வெப்சைட்டில் வெளியிட வேண்டும்’’ என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தனர்.