ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: தி.மு.க. சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் 22-ம் தேதி ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொலைத் தொடர்புகளை துண்டித்து அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அடக்குமுறைகள், ஊடங்கு உத்தரவின் மூலம் காஷ்மீரை பா.ஜ.க. தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது என கூறினார். அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்து அவர்களின் அடிப்படை உரிமைகளை பறித்துள்ளது வேதனை அளிக்கிறது என கூறினார். வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக் கோரி தி.மு.க. சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் 22-ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறினார். ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட கட்சிகளின் எம்.பி.க்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Stories: